Loading

Friday, July 20, 2012

நாட்டு நடப்பு (இந்தியா )

ஜனாதிபதி கலாட்டா !




ஒருவழியாக ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு வந்திருக்கிறது .மம்தா கடைசி நேரத்தில்
இப்படி மனம்மாறுவார் என்பதை காங்கிரஸ்சே அறிந்திருக்காதோ என நினைப்பது போல ,பிரணாப்பின் முகம்
 மேலும் மகிழ்ச்சியடைந்ததை பார்க்க முடிந்தது .அதே சமயத்தில் ,சங்மாவின்
எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கிறது.
அவரை முதலில் ஆதரித்த ஜெயலலிதா .சங்மாவுக்கு
எதுவும் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..இந்த களேபரத்தில் முலாயம்சிங் ,சங்க்மாவுக்கும்
ஒரு குத்து ,பிரனாப்புக்கும் ஒரு குத்து என்று ஓட்டுச்சீட்டில் மாற்றி மாற்றி குத்தியது
ஒரு கலகல அரசியல் தமாஷ்தான் .அடுத்ததாக துணைஜனாதிபதி தேர்தல் களமும்
சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஹமீது அன்சாரியும்,பாஜக சார்பில் ஜஸ்வந்த்சிங்கும்
போட்டியிடுகிறார்கள்.அன்சாரிக்கே தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வாய்ப்பு அதிகமென சொல்லப்படுகிறது..
துணை ஜனாதிபதி பதவி ,ஜனாதிபதி பதவி போன்றே முக்கியமில்லாத ஒன்றாக கருதப்படுவதால் ,இதில் தோற்றாலும் பாஜகவுக்கு
பின்னடைவு இல்லை என்பதே நிதர்சனம்.


தமிழ் ஈழமும்,தமிழக அரசியல் கட்சிகளும் !







கடந்த இரண்டு மாதமாக ,தனித்தமிழ் ஈழம் என்ற கோஷத்தை முன்வைத்து
அரசியல் வித்தையை நடத்திக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.டெசோ மாநாடு நடத்தி
தமிழ் ஈழ விதையை மீண்டும் தூவுவேன் என்று முதலில் சொன்ன கருணாநிதி.இப்போது
தன் நிலையை மாற்றி (எத்தனை முறை,தன்  நிலையை மாற்றினார் என்பதை கணக்கில் வைக்க முடியவில்லை )
தனி ஈழ கொள்கையை இப்போது பரப்ப விரும்பவில்லை என்பதை சொல்லியிருக்கிறார்.
இப்போது இதையும் மாற்றி,தமிழ் ஈழ கொள்கையை நான் கைவிடவில்லை,இப்போதைக்கு அந்த எண்ணமில்லை
என்று யாருக்கும் புரியாத வண்ணம் மீண்டும் குழப்பியடித்து இருக்கிறார்.

இதனிடையே ,இலங்கை தமிழர்கள் நல்வாழ்வுக்கு போராடும் தமிழக கட்சிகள்,தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும்
இலங்கை தமிழ் அகதிகளை ,கண்டுகொள்ளாமல் இருப்தை அறிய முடிகிறது.சமீபத்தில் மண்டபம் முகாமில் ,
மூன்று குழந்தைகளுக்கு தாயான ,ஈழ தமிழச்சியை ,வன்புணர்வு செய்ய முயற்சித்து இருக்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர்!
இதைக் கண்டிக்க வைகோவும் முன்வரவில்லை,கருணாநிதியும் முன்வரவில்லை.இலங்கை அகதிகளை கொத்தடிமைகள் போலத்தான்
இன்றுவரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது ,யாருக்கும் தெரியாமல் இருக்கவில்லை.அவர்களுக்கான அடிப்படை வசதிகள்
செய்து தர,இதுவரை எந்த தமிழினத் தலைவர்களும் கடிதம் எழுதாமலிருப்பது வியப்பின் சரித்திரக் குறியீடுதான் .




பெண்களின் மீதான வன்முறை வாரம் !





கடந்த வாரம் முழுக்கவே பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் மற்றும் சித்திரவதை செய்திகளை 
பார்க்க முடிந்தது.அதில் குறிப்பிட்ட சம்பவமான அசாமில் நடைபெற்ற 
பாலியல் வெறியாட்டம்தான் .இளம்பெண்ணை 20பேர் கொண்ட கும்பல் மானபங்கப்படுத்தப் பட்டதை
தொலைக்காட்சி நிருபர் படம்பிடித்து உலகிற்கு காட்டியிருக்கிறார்.இருபது பேர் கொண்ட கும்பலை 
பிடித்ததாக சொல்லும் அசாம் அரசு,அந்த நிருபரையும் இப்போது கைது செய்திருக்கிறது.அந்தப் பெண்ணை காப்பாற்ற 
போகாமல் ,படம் பிடித்தாதாக கூறி வழக்கு போட்டிருக்கிறது அசாம் காவல்துறை..அந்த நிருபரை ஏதோ சூப்பர்ஹீரோவாக 
நினைத்துவிட்டார்கள் போல.இருபது பேர் கொண்ட கும்பலை ,ஒரே ஆள் புரட்டிப் போடும் வித்தையை தெரிந்துவைத்திருக்க 
வேண்டாமா என காவல்துறை இப்போது கேட்கிறது.

இந்தக் கேள்வியை அசாம் காவல்துறை கேட்டபோதே ,வழக்கு எந்த திசையில் பயணிக்கப்போகிறதென்பதை அறிய முடிகிறது.
வாழ்க ஜனநாயகம் என்ற கோஷத்தை இப்போது சொல்லத்தோனுகிறது!



No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்