Loading

Sunday, January 29, 2017

வர்லாம் வர்லாம் வா (திரைப்பட விமர்சனம் )

நேற்று ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது.மிக அட்டாகசமான கதைக் களம்.முறையற்ற ,அங்கீகாரமில்லாத 
மருத்துவ கல்லூரிகளும்,பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் முறைகேடுகள்,அதனால் பாதிக்கப்படும் மாணவர்களென சிறப்பாக சென்றுகொண்டிருந்தது .உலக சினிமாக்களில் கூட இக்கதைக்களத்தை 
ஆவனமாக கொண்டுசெல்லுமளவு சிறப்பாகவே எடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் என்ன பிரச்சினை என்றால்,
இடை இடையே கதைக்கு சம்பந்தமே இல்லாத  ஒருவன் வருகிறான்.
நான் மோதுனா தாங்கமாட்ட....
சுண்டு விரல்ல தொட்டுப்பார்ரா...
தெரிஞ்ச எதிரிய விட தெரியாத எதிரிக்கு 
அல்லு அதிகம்னு ,சம்பந்தமே இல்லாமல் 
கிறுக்கத்தனமா கத்திட்டு போறான்.

பிறகு திடிரென கதைக்கு வருகிறார்கள்,
கொஞ்ச நேரம் கழித்து ,அதே கிறுக்கு பையன் வந்து ,
குத்தாட்டம் போடுறான்,

நாலு பேரை அடிக்குறான்.
யார் இவண்?
ஒரு சமூக பிரச்சினை கதைக்கு இவ்ளோ இடைஞ்சல் பன்றான்.
முதல்ல அவனை தள்ளிப் போங்க சொல்லுப்பா என கத்தவேண்டும் போல இருந்தது.
.

வசதிகளே இல்லாத தரமற்ற தனியார் மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் 
இன்னும் நிறைய இருக்கின்றன.அதை ஆவணப்படுத்தும் படத்தில்,
கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒருவனை ஏன் படத்தில் வைத்தார்களென தெரியவில்லை.கதையின் வில்லனான கசாப்பு கடை கல்வி வள்ளல் கதாப்பாத்திரத்தை விட ,எனக்கு இந்த நபர்தான் கதையை சொல்லவிடாத வில்லனாக தெரிந்தான்

அந்த நபர் வரும் சீன்களை எல்லாம் வெட்டியெடுத்தாலே போதும்,
இந்த திரைப்படம் உலக சினிமாக்களில் கூட திரையிட தகுதியுள்ள படமாக அமைந்திருக்கும் என்பது ,என் கருத்தாக மட்டுமில்லை,
சினிமா ஆர்வலர்களின் கருத்தாகவும்  இருக்கிறது.

Wednesday, January 25, 2017

மெரினா சர்வாதிகாரங்கள் !!!

எச்சரிக்கை :
இது யாரையும் புண்படுத்தாத நோக்கில் புனையபட்ட செயற்கை கதை அல்ல,
அனைவரையும் புண்படுத்தும் உண்மைக் கதை
கதை 1 :
சரவணன் BE முடித்திருக்கிறான்.
தென்மாவட்டத்தில் பிறந்து ,கஷ்டப்பட்டு படித்து சென்னையின் மேன்ஷனில் தற்போது வசித்து வருகிறான்.
சில மாதம் முன்புதான் தன் நீண்ட நாள் கனவான ,இருசக்கர வாகனொமொன்றை (பல்சர் 220)ஆசை ஆசையாக வாங்கினான்.
இன்று இண்டெர்வீவ் அட்ண்டெண்ட் செய்வதற்காக தன் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.கம்பெனி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்ற சந்தோசத்துடன் வெளியே வந்து பார்த்த போது,சரவணனின் வாகனம் சுக்குநூறாக அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.
வாகனத்தை விட மிக மோசமாக நொறுங்கிப்போகிறான் சரவணன்.
கதை 2
ரோட்டோரமாக பெட்டிக்கடை நடத்தும் பெருமாள் ஒரு சிறு வியாபாரி .பிளாட்பாரத்தில் கடை நடத்தி பிழைத்து வந்த
பெருமாளுக்கு ,ஒரே பிரச்சினை, மழை பெய்தால் கடை நடத்தமுடியாது.இதற்காகவே நீண்டநாள் திட்டமிட்டு அக்கம்பக்கம் கடன் வாங்கி,
நாலு பிளைவுட் கட்டைகளை ,கார்பெண்டர்களை வைத்து அடித்து,சிறிய பெட்டியாக்கி
அதில் மிட்டாய்களை வைத்து , அவனுட்குட்பட்ட வர்க்கத்தில் கொஞ்சம் பெருமையாக கடை நடத்தி வந்தார்.
அன்றும் வழக்கம்போல்,குளித்து முடித்து,தன் அன்றைய வாழ்ந்திருத்தலுக்காக பெட்டிக்கடையை திறக்க வந்தார்.
பெட்டிக்கடை இருந்த சுவடில்லாமல் போயிருந்தது.வாழ்தலை பற்றிய பயத்துடன் பெருமாள் தெறித்து ஓடிக்கொண்டிருந்தார்.
கதை 3
மைக்கேலுக்கு எப்போதும் வீடு ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறது.
ஆறு மாததிற்கு ஒருமுறை வாடகை கட்டுபடியாகமல் ,குடும்பத்துடன் வேறு வீடு தேடி அலைவது வாடிக்கையான கஷ்ட அனுபவத்தை தந்திருக்கிறது.
தனக்காக இல்லாவிட்டாலும்,தன் பிள்ளைகளுக்காக ,நிரந்தர?இருப்பை
தேடித்தர எண்ணி,ஏதாவது ஒரு இடத்தில்
குடிசையை போட்டு விட முடிவெடுத்து,
ஆறு மாதத்திற்கு முன் ,
ரோட்டோர ,தின வட்டி வசூல்காரனிடம்
வட்டிக்கு காசு வாங்கி,குடிசை அமைத்து, பிள்ளைகளுக்காக தற்காலிக பாதுகாப்பை உறுதிப்படுத்தி தந்திருந்தான்.அன்றைய தினம்
மீன்பாடு வேலைக்கு போய்விட்டு திரும்பி வந்து ,ஏரியாவில்.நுழைந்தபோது.தன் மொத்த உழைப்பான குடிசையும் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து மைக்கேல் மயங்கிக்கொண்டிருந்தான்.
கதை 4
இடம் :மெரினா கடற்கரை.
இரண்டு போலிஸ்காரனின் உரையாடல்.
யோவ் மேலிடத்துல இருந்து தகவல் வந்திருக்கு,இன்னிக்கு செம வேட்டை காத்திருக்கு .
என்ன சொல்றீங்க ஏட்டையா?
போராட்டப் பசங்களை தடியடி நடத்தி கலைக்க சொல்லி ஆர்டர் வந்திருச்சு .
பசங்கள பார்த்தா பாவமா இருக்கு ஏட்டையா ?பேசி அனுப்பி வைக்கலாம்ல
அப்படி செஞ்சா..மிஞ்சுவானுங்கையா..
அப்படியே பேச்சுவார்த்தை நடத்தி இன்னிக்கு கலைஞ்சு போய்ட்டாலும்,நாளைக்கு வேறொரு பெரிய பிரச்சினைக்கு ,இன்னும் வீரியமா வருவானுங்க .
சரி நமக்கெதுக்கு வம்பு,
நீ போய் ,அந்தா பைக்கா தெரிது பாரு ,அதுல லத்திய வச்சு உடைக்க ஆரம்பி,
நான் குப்பத்து பக்கமா போய் தீ வச்சு ,
கடைங்களை நொறுக்கி
மேலிடம் சொன்ன கடமையை ஆத்துறேன்.
நீ பயப்படாத ,
இடைல எதிர்த்து கேக்குற எல்லாத்தையும் நமம் போலிஸ் செட்டு பார்த்துக்கும்.

Sunday, January 15, 2017

2000 ரூபாய் !!!

காட்சி 1
தல்லாகுளம் "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா "கிளையின்
நீண்ட கியு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
வங்கி வாசல் முன்பு
எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிந்தன.
கியுவின் 200வது ஆளாக வங்கி வாசலை நோக்கி,இயந்திரத்தனமாக நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
சுளீரென்ற வெயிலின் ஒளி,வியர்வையை எட்டிப்பார்க்க வைத்திருந்தது.
கியுவில் நின்றுகொண்டிருக்கும் மற்றவர்களின் முகங்களை பார்த்தேன்.
அனைவரையும் இதற்கு முன்பே பார்த்தது போலிருந்தது.
ஏன் அப்படித் தோன்றியதென தெரியவில்லை.
எனக்கு பின்னால் நிற்கும் ஒருவர்,என்னைத் தொட்டு ..
தம்பி ..இன்னிக்கு எவ்ளோ தராங்களாம்..
2000ரூபாயா 5000ரூபாயா ?
என ஆதங்கத்தோடு கேட்டார் ?
எனக்கு சரியாக தெரியவில்லையென
அவரிடம் சொன்னாலும்,
இதற்கு முன்பே அவர் இந்த கேள்வியை கேட்டது போலவும்,
நானும் இத்தகைய பதிலை முன்பே கூறியது போலவும் நினைவில் வந்து போனது.
எனக்கு முன்பு நிற்கும் ,வயதான பெரியவர் ,வங்கி செக்கியுரிட்டியிடம் ,என்னால ரொம்ப நேரம் நிக்க முடியல ,என்னை மட்டும் சீக்கிரம் உள்ளே அனுமதிக்க முடியுமாவென கெஞ்சிக்கொண்டிருந்தார்.
எதற்கும் மசிந்து கொடுக்காத செக்கியூரிட்டி,அப்பெரியவரை வரிசைக்கே திரும்ப அனுப்பி வைத்தார்.
ஐந்தைந்து நபராக வங்கியின் உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தனர்.
வங்கியிலிருந்து வெளியே வரும் ஒவ்வொருடைய கையிலும் 2000ரூபாய் நோட்டு ஒன்றை திணிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டதை போல உணர்ந்தேன்.
சில மணி நேரம் கழித்து,
வங்கியினுள் தள்ளப்பட்டேன்.
பெரியவர் ஒருவர் ,
தம்பி ,இந்த ஃபார்மை நிரப்பிக் கொடுங்களேன் என கெஞ்சும் தொனியில் என்னிடம் கேட்டார்.அவரையும் முன்பே பார்த்தது போலிருந்தது.
அவருடைய பெயர் அழகர்சாமி என்பதை
படிவம் நிரப்பித்தருகையில் தெரிந்துகொண்டேன்.
சுமார் சிடுமூஞ்சி வங்கி ஊழியர்கள்,இப்போது சுமார் சுமார் சிடுமூஞ்சி ஊழியர்களாக பரிணாமம் பெற்றிருந்ததை உணர முடிந்தது.
பெரியவர் அழகர்சாமி ,அவ்வூழியர் ஒருவரிடம்,தனக்கு 2000ரூபாய் தாள் வேண்டாம் எனவும் ,100ரூபாயாக தருமாறு கேட்டார்.
வங்கி ஊழியரோ,அசால்டாக மோடி இப்பதான் அடிச்சிட்டு இருக்காப்ல,வரும்போது தரேன்,இப்ப இத வச்சிக்கோவென கையில் திணித்து அனுப்பிவிட்டார்.
யாரோ ஒரு பெண் ..
தன்னுடைய பெயர்தான் ஸ்வேதா என வங்கி மேனேஜரிடம் மன்றாடிக்கொண்டிருந்ததை எதேச்சையாக கேட்க முடிந்த வேளையில்..
என் முறையும் வந்தது..
எனக்கும் 2000ரூபாய் பேப்பரைத்தான் தருவார்கள் என்று தெரிந்ததால்,
அவர்கள் திணிப்பை மறுப்பேதும் சொல்லாமல் வாங்கித் தொலைத்து,வாயிலில் தள்ளப்பட்டேன்.
காட்சி 2
தல்லாகுளம் "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா "கிளையின்
நீண்ட கியு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
வங்கி வாசல் முன்பு
எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிந்தன.
கியுவின் 200வது ஆளாக வங்கி வாசலை நோக்கி,இயந்திரத்தனமாக நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
சுளீரென்ற வெயிலின் ஒளி,வியர்வையை எட்டிப்பார்க்க வைத்திருந்தது.
கியுவில் நின்றுகொண்டிருக்கும் மற்றவர்களின் முகங்களை பார்த்தேன்.
அனைவரையும் இதற்கு முன்பே பார்த்தது போலிருந்தது.
எனக்கு பின்னால் நின்றுகொண்டிருக்கும் கனேசன் என்கிற நபர்,
தம்பி ..இன்னிக்கு எவ்ளோ தராங்களாம்..
2000ரூபாயா 5000ரூபாயா ?
என ஆதங்கத்தோடு கேட்டார் ?
முன்பு கேட்ட அதே கேள்வியென ...
என்னுள் திகைத்தாலும்,
எனக்கு சரியாக தெரியவில்லையென
கூறினேன்.
பெரியவர் அழகர்சாமி ,எனக்கு முன்னால் நிற்கமுடியாமல் வியர்வை வழிய நின்றுகொண்டிருந்தார்.
பேக்கில் இருந்த வாட்டர்பாட்டிலை பெரியவரிடம் கொடுத்தேன்,
தாகத்தை தணித்துக்கொண்டு ,கஷ்டத்தை எதிர்கொள்ள தொடங்கினார்.
சில மணி நேரம் கழித்து,வங்கியில் அனுமதிக்கப்பட்டேன்,
பெரியவர் அழகர்சாமி படிவம் நிரப்பித் தர கேட்டார்,அவரிடம் அழகர்சாமிதானங்கையா என கேட்டு எழுத தொடங்கினேன், எப்படி தெரியுமென கேட்டார்,
காதில் கேட்காதது போல பாவனை செய்து நிரப்பித் தந்தேன்,
ஸ்வேதா என்கிற பெண்மனி ,கடுப்பை முகத்தில் வைத்துகொண்டு
ஆவேசமாக வங்கியை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்.
சுமார் சுமார் சிடுமூஞ்சி ஊழியர்கள்,இப்போதும் மோடி சில்ல்றை நோட்டை அச்சடிச்சுட்டு இருக்கார்,அதுவரை இதை வாங்கிக்கோவென திணித்துக்கொண்டிருந்தனர்,
அழகர்சாமி பெரியவருக்கும்,
எனக்கும்,எனக்கு பின்னால் நின்ற கணேசனுக்கும் ,பிங்க் கலர் பேப்பர் திணிக்கபட்டு வாயிலில் கடாசப்பட்டோம்..
காட்சி 3
தல்லாகுளம் "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா" கிளையின்
நீண்ட கியு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
வங்கி வாசல் முன்பு
எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிந்தன.
கியுவின் 200வது ஆளாக வங்கி வாசலை நோக்கி,இயந்திரத்தனமாக நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
சுளீரென்ற வெயிலின் ஒளி,வியர்வையை எட்டிப்பார்க்க வைத்திருந்தது.
கியுவில் நின்றுகொண்டிருக்கும் மற்றவர்களின் முகங்களை பார்த்தேன்.
அனைவரையும் இதற்கு முன்பே பார்த்தது போலிருந்தது.
எனக்கு பின்னால் நிற்கும் கணேசன்,
என்னிடம் பேச எத்தனித்தார்,
அவரிடம் திரும்பி,
இன்னிக்கும் 2000ரூபா தான்னே தராங்க என கூறி, அவரை சலிப்பு மோடிலிருந்து ஷாக் மோடுக்கு பார்வேர்ட் செய்தேன்.
முன்னால் நிற்கும் அழகர்சாமி பெரியவருக்கு,தண்ணீர் கொடுத்து,
தன்னம்பிக்கை தளராமல் நிற்கவைத்தேன்.
பேங்க் செக்கியூரிட்டி முறைத்தவாரே வரிசையில் நிற்போரை,ஐந்தைந்து பேராக கணினித்தனமாக அனுப்பிக்கொண்டிருந்தார்.
சில மணி நேரம் கழித்து,
வங்கியினுள் இழுக்கபட்டதும்,
பெரியவர் அழகர்சாமி படிவத்தை நிரப்ப நீட்டினார்,இந்த முறை பெயரெதும் கேக்காமல்,எழுதிமுடித்து அவரிடம் அளித்தேன்.
எழுதிக்கொடுத்தது சரிதானா என சந்தேகத்துடன் ,படிவத்தை பலவாறு திருப்பி திருப்பி பெரியவர் பார்த்துக்கொண்டார்,
ஸ்வேதா என்கிற பெண்..
நான் கம்பளைண்ட் பண்னாம விடமாட்டேனென ,மேனேஜரிடம் கோபமாக கத்திவிட்டு
கடந்துகொண்டிருந்தார் .
சுமார் சுமார் வங்கி ஊழியர்கள் ,சில்லறை கேட்டவர்களிடமெல்லாம்
மோடி அச்சடிச்சுட்டு இருக்காப்ல என
வழமைபோல் துப்பிக்கொண்டே ,2000ரூபாயை திணித்து,எங்களை
அவுட் ஆப் ஸ்டேடியத்திற்கு (வங்கி வாசலுக்கு)தூக்கியடித்தார்கள்
காட்சி 50
தல்லாகுளம் "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா "கிளையின்
நீண்ட கியு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
வங்கி வாசல் முன்பு
எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிந்தன.
கியுவின் 200வது ஆளாக வங்கி வாசலை நோக்கி,இயந்திரத்தனமாக நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
சுளீரென்ற வெயிலின் ஒளி,வியர்வையை எட்டிப்பார்க்க வைத்திருந்தது.
கியுவில் நின்றுகொண்டிருக்கும் மற்றவர்களின் முகங்களை பார்த்தேன்.
அனைவரையும் இதற்கு முன்பே பார்த்தது போலிருந்தது.
பின்னால் நிற்பது கணேசன்,
முன்னால் நிற்பது பெரியவர் அழகர்சாமி இப்படி
ஒரே நிகழ்வில் சிக்கித்தவித்துக் கொண்டிருப்பதை யாரிடம் சொல்வதென தெரியவில்லை,
கணேசனிடம் சொன்னால்,
உடம்பு ஏதும் சரியில்லையாப்பா வென கரிசனத்துடன் பல்பு கொடுக்கப்படுமென தெரிந்ததால்,
இதுவரை அம்முயற்சியை எடுக்கத் துணியவில்லை.
கியுவின் வரிசையில் உள்ள மனித தலைகளில்,தெரிந்த முகத்தை தேடிக்கொண்டிருந்தேன்,தூரத்தில்
டாக்டர் மணிகண்டன் நின்றுகொண்டிருப்பதை உணர்ந்தேன்.
அவரிடம் எனக்குள் நிகழும் இப்பிரச்சினையை சொல்லவேண்டும் போல இருந்தது.
திடிரென எப்படிப் பேசுவதென தயக்கமிருந்து கொண்டே இருந்தாலும்,
இந்த வாழ்க்கை இச்சுழற்சியிலயே நின்றுவிடுமோ என பயம் கவ்வி,
அவரை பார்த்து பிரச்சினையை பிரித்தெடுக்க எண்ணி,
டாக்டரை நோக்கி கையசைத்தேன்.
அவரும் என்னை அடையாளம்.கண்டு கையசைத்த நொடியில்,
2000ரூபாய் நோட்டுக்கு சில்லறை கிடைத்த மகிழ்ச்சியை எனக்குள் அடைந்தேன்.
கியுவிலிருந்து வெளியே வாங்க,நான் இடம் தரேன் என சைகை செய்ததை ,
சரியாக புரிந்துகொண்ட டாக்டர் மணிகண்டன் ,தானொரு சிறந்த சைக்காலஜிஸ்ட் என எனக்குள் நிரூபித்துக்கொண்டிருந்தார்
என்ன தம்பி,எவ்ளோ நேரம் நிக்குறீங்க?
என கேட்டார் ,
50நாளா நிக்குறேன் டாக்டரென சொல்லி உடனடி அதிர்ச்சி கொடுத்தால்,
மதுரையை விட்டே டாக்டர் ஒடிவிடும் அபாயமிருப்பதால்,இப்பதான் டாக்டரென அருண் ஜெட்லியே நம்பமுடியாத பொய்யொன்றை உதிர்த்து,
பின்னால் நிற்கும் கணேசனிடம்
சமாதனம் பேசி ,டாக்டரை கியுவில் இணைத்துக்கொண்டேன்.
என்னிக்கு இந்த பிரச்சினை தீரப்போகுதோனு தெரியலையே என டாக்டர் அலுத்துக்கொண்டதும்,
அவருக்கும் என் போன்ற பிரச்சினை இருக்குமோவென நினைத்தாலும்,
அவர் ஃப்ரெஷ்சாக நின்றுகொண்டிருப்பதால் ,இந்த பாதிப்பை அனுபவித்திருக்க மாட்டாரென ஆசுவாசமடைந்தேன்.
டாக்டர் ...உங்க அப்பாய்ண்ட்மெண்ட் வேனும் டாக்டரென பேச்சு கொடுத்தேன்,
யா...கண்டிப்பா,
சாயங்காலம் 6மணிக்கு வந்திடுங்க தம்பியென உற்சாகமாக பதில் சொன்னவரை,இடைமறித்து,
இல்லை டாக்டர் ,எனக்கு இப்பவே அப்பாய்ண்ட்மெண்ட் வேனும் சாரென,
ரிசர்வ் பேங்க்த்தனமாக குழப்பியடித்தேன்.
இப்பவா ...இப்ப எப்படி தம்பி?
ஆமா டாக்டர்,இப்பவேதான் .
க்ளினிக் வாங்க தம்பி .கன்சல்ட் பண்ணலாம்
இல்லை டாக்டர் .
இந்த இடத்தை விட்டு என்னால வரமுடியல..
திரும்ப திரும்ப இங்கேயேதான் நிக்க முடியுது டாக்டர் ..
ஓ...
சரி சொல்லுங்க தம்பியென
டாக்டர் கேட்க முன்வந்ததும்,
குழப்பத்துடன் பேச ஆரம்பித்தேன்.
டாக்டர் ..
ஒரு 50நாளாவே ஒரே விசயம் மட்டுமே,எனக்குள்ள நடக்குது டாக்டர் .
அப்படியா.. என்ன விசயம் ?
ஏதோ பிரம்மையா இருக்கு டாக்டர்,
டெய்லி இதே க்யுவுலயே நிக்குறேன் டாக்டர் ,
இதே வங்கி .
இதே நபர்கள தினமும் பாக்குறேன் டாக்டர் ..
ஓ..வென ஆச்சர்யத்துடன் கேட்ட டாக்டர்,
சரி தம்பி...
உங்ககிட்ட சில கேள்விகள் கேக்குறேன்..
பதில் சொல்லுங்க.
உங்களுக்கு தினமும் ..
ஒரு பிங்க் நிற 2000ரூபா தாளை திணிச்சு வெளியே அனுப்பி விடுறாங்களா ?என டாக்டர் திருப்பி கேட்டார்
ஆமா டாக்டர் ..
அதேதான் தினமும் நடக்குது
சரியென நிதானமான டாக்டர்,
அந்தா தெரியுதே அந்த பொண்ணு,
பேரு ஸ்வேதா தான ?
கரெக்ட் டாக்டர் ..
அந்த பொண்ணையும் டெய்லி பாக்குறேன்,
எப்படி டாக்டர் உங்களுக்குத் தெரியும்
மூதேவி..இது பிரம்மையில்ல
டெய்லி இதுதாண்டா நிஜமாவே நடக்குது.
நானும் 50நாளா கியுவுல நிக்குறேன்டா.
காலையில வந்தா ...சாயந்திரம் ஆகிடுது.
கியுவுல நின்னு பாதிக்கப்பட்டு
எந்த நினைவும் வராம
மறுபடியும் இதே கியுவுல நிக்குறதுதான்
உன்னோட பிரச்சினை,
நாடு முழுக்க எல்லாருக்கும் இந்த ஒரு சம்பவம் தான்டா 50நாளா நடந்துட்டு இருக்குது.
பத்து நாளைக்கு முன்னாடி கூட..
இதே சந்தேகத்தை என்கிட்ட கேட்டது கூட மறந்து போச்சாடா உனக்கு.
டாக்டர் சொல்ல சொல்ல ..
நம்பமுடியாமல் திகைத்தவாரே
வங்கியினுள் தள்ளப்பட்டேன்
சிறிது நேரத்தில்..2000ரூபாய் தாள் ஒன்றை திணிக்கபட்டு ,வாசலுக்கு வெளியே துப்பப்பட்டேன்.
காட்சி 51
தல்லாகுளம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையின்
நீண்ட கியு வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்.
வங்கி வாசல் முன்பு
எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிந்தன.
கியுவின் 200வது ஆளாக வங்கி வாசலை நோக்கி,இயந்திரத்தனமாக நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
சுளீரென்ற வெயிலின் ஒளி,வியர்வையை எட்டிப்பார்க்க வைத்திருந்தது.
கியுவில் நின்றுகொண்டிருக்கும் மற்றவர்களின் முகங்களை பார்த்தேன்.
அனைவரையும் இதற்கு முன்பே பார்த்தது போலிருந்தது.

பிரபலமான பதிவுகள்