Loading

Thursday, May 31, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல் -தோற்கப்போவது யாரு ?


புதுக்கோட்டை இடைதேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது .திமுக ,மதிமுக ,பாமக,ஆகிய
கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையிலும் ,அதிமுக ,தேமுதிக ,இந்தியஜனநாயக கட்சி மற்றும்
பல உதிரிகட்சிகளும் களத்தில் நின்று புதுக்கோட்டையில் ஒரு திருவிழா எபெக்ட்டை தந்துகொண்டிருக்கிறார்கள் .

அந்த திருவிழா கோலத்திற்கு முழுமுதல் காரணம் ,நம் அதிமுக அமைச்சர்கள்தான்.தொண்டர்கள் படைசூழ
பவனி வரும் காட்சிகளை தினம் தினம் புதுக்கோட்டை வாசிகள் ரசித்துக்கொண்டும்,சகித்துக்கொண்டும் இருக்கிறார்கள் .
தொகுதி வேட்பாளருக்கு எந்த வேலையும் வைக்காமல் ,அமைச்சர்கள் தேர்தல் பணிகளை இழுத்துபோட்டுக்கொண்டு
செய்யும் விதத்தைப் பார்த்தால் ,கூடிய விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும் என்றே தோன்றுகிறது .
சில அமைச்சர்கள் ,பன்னீர்செல்வத்துடன் மட்டுமே ஒட்டிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது .
இந்த அசாதாரணமான சூழ்நிலையிலையும் அவர்களின் விளம்பர மோகம் கண்டு ஆச்சர்யப்படாத தொண்டர்களே இல்லை .

புதுக்கோட்டைவாசிகளுக்கு தினமும் குழாய் தண்ணீர் வருகிறது ,மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை ,ரேஷன்கடையில் கூடுதல்
மண்ணெண்ணெய் கிடைக்கிறது ,இந்த மாதிரியான அரும்பெரும் அதிசயங்களை அதிகாரிகள் செய்கிறார்களா? என்று தவறான
எண்ணம் வேண்டாம் ,நம் அமைச்சர்கள்தான் குழாய் தண்ணீர் திறந்துவிடுவதும் ,ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் ஊற்றுவதுமாக
ஒரு பேச்சு நிலவுகிறது .."மக்கள் தொண்டே மகேசன் தொண்டு 'என்று அமைச்சர்களின் முதலாளியம்மா அடிக்கடி சொல்வதன்படி  கேட்கிறார்கள் .
அப்படிப்பட்டவர்களுக்கு ,மக்கள் உரிய கைமாறு செய்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது .

மக்கள் ஆதரவு தருவதா முக்கியம்? , முதலாளியம்மாவின் ஒரு ஓரப்பார்வை அவர்களின் (அமைச்சர்கள் )மீது படவேண்டும் என்றே
இந்த வேலைகளை திறம்பட செய்து வருகிறார்கள் .அதிமுகவின் எடுபிடிகள் ,அப்பிரசன்டிகள் என்று  பொதுமக்கள்
அவர்களை வாழ்த்தினாலும் முகம் கோணாமல் செய்யும் பாங்கை கண்டு  ,மகாத்மா காந்தியிடம் கூட அந்த சகிப்புத்தன்மை இருக்குமா
என்ற சந்தேகம் எழுகிறது .

அப்படிப்பட்ட அமைச்சர்களுக்கு இருக்கும் ஒரே கவலை ,அவர்கள் ஆதரிக்கிற அதிமுக  வேட்பாளர்தான் !இவ்வளவு உழைத்து ,களைத்து
வெற்றியை தேடித் தந்தாலும் இந்த புதுக்கோட்டை வேட்பாளர் என்ன கூறுவார் என்பதைக்கண்டே அவர்களுக்கு வருத்தம் .
அப்படி என்னதான் அந்த வேட்பாளர்(கார்த்திக் தொண்டைமான் ) கூறுவார் என்பதைத்தான் பார்ப்போமே !

இந்த இமாலய வெற்றிக்கு காரணம் ,மாண்புமிகு முதலமைச்சர் ,புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்கள்தான் .அவர்களுக்கு என் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன் என்றே முழங்குவார் . வீட்டுக்கு வீடு பால் விநியோகம் கூட செய்தோமே ,நமக்கு அந்த பெயர் கிடைக்காமல் போய்விடுமே
என்ற கவலை , அமைச்சர்களுக்கு இப்போதே இருக்கும் என்று தோன்றுகிறது .

வெற்றிபெறுவது அதிமுக வேட்பாளர்தான் என்றாலும் ,தோற்பது சாட்சாத் ,நம்முடைய எடுபிடி அமைச்சர்கள்தான் .  #sosad

No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்