Loading

Saturday, May 12, 2012

ஜெயலலிதாவின் ஓராண்டுகால கற்கால ஆட்சி !



ஆதிமுக அரசு பதவியேற்று ஓராண்டை எட்டியிருக்கிறது ,அதன் அரும் பெரும் சாதனைகளை
பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம் .பதவியேற்ற முதல் மாதத்திலேயே ,எதிர்கட்சிகளுடன் வழக்கம்போல் சண்டைபோடுவாரென
பலரும் எதிர்பார்த்தபோது ,அதையெல்லாம் விட்டுவிட்டு ,பள்ளிக்குழந்தைகளுடன் சமச்சீர் சண்டை போட்டு
வரலாறு படைத்தார் .

அடுத்ததாக நிலமோசடி வழக்குகள் !ஆரம்பத்தில் திமுக கொள்ளைக்கும்பலிடம் இருந்து நிலத்தை பறிமுதல் செய்ய
நடவடிக்கை எடுத்தாலும் ,பாதி வழக்குகள் ,திமுக புள்ளிகளுக்கும் ,போலிஸ் மாமாக்களுக்கும் நடக்கும் அன்டர்டீலிங்கில்
வழக்குகள் வத்தலாகிப் போனதுதான் மிச்சம் .

இரையை எப்போது பிடிக்கலாமென காத்திருக்கும் நரியைப் போலத்தான் ,கழக அரசும்
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் ,தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தியது .பால்விலை உயர்வு ,பேருந்துக்கட்டண உயர்வு என்ற
கொடிய பிரமாஸ்திரத்தை மக்கள் மீது ஏவி தன் இரைப்பசியை கொஞ்சமாக தீர்த்துக்கொண்டது .இதற்கு விளக்கம்கேட்கப்
போன எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட விமர்சனங்களை வைத்து விஷயத்தை திசைதிருப்பி சாதனை படைத்தது .


இடையே ஒரு மன்னார்குடி  விளம்பர டிரைலர் வேறு மக்களை திசைதிருப்ப
ஓட்டினார் .ஆருயிர் தங்கை சசிகலாவினுடனான ஊடல் நாடகம் அரங்கேறி ,
சில கைதுப் படலங்கள் நடந்தேறி ,பின் ஆருயிர் அக்காவுக்கு கடிதம் எழுதி
முடிக்கப்பட்ட டிரைலரை கண்டு வியக்காத மனிதர்களே இல்லை .சரி ,அவர்களது  குடும்பப் பிரச்சினை ,விட்டுவிடலாம் .


அதற்கு அடுத்த வாரம் ,நூலக இடமாற்றம் என்ற உயர்ந்த கொள்கையை அரசு வெளியிட்டது .நூலகத்தை மாற்றி மருத்துவமனை
,சட்டமன்ற புதிய கட்டிடத்தை மாற்றி மருத்துவமனையென ,இஷ்டத்திற்கு அரசாணையை வெளியிட்டது தமிழக  அரசு .நாட்டில்
மருத்துவமனைகளுக்கு பஞ்சமில்லை ,டாக்டர்களுக்குத்தான் பஞ்சம் என்ற நிலையில் ,மேலும் இரண்டு மருத்துவமனைகள்
கட்ட முடிவெடுத்த அரசின் சாதனையை விவரிக்க வார்த்தையே இல்லை .

அடுத்ததாக யாரும் எதிர்பார்க்காத ,மின்வெட்டு கடாயுதத்தை மக்களின் நடுமன்டையில் நச்சென அடித்த அரசு ,அடித்துக்கொண்டிருக்கும்
அரசை பற்றி விவரிக்க வார்த்தையே இல்லை .சரத்குமார் ,கிருஷ்ணசாமி இவர்கள் இருவரைத் தவிர அத்தனை மக்களும்
தமிழக அரசின் இந்த மின்வெட்டு சாதனையை பற்றி வண்டை வண்டையாக  அரசைப் புகழ்ந்து போஸ்டர்கள்,
ஊர்வலங்கள் நடத்தி அரசை முறையாக கவுரவித்தார்கள் தமிழக பொதுமக்கள். இது போன்ற அரிய சாதனையை
மற்ற மாநிலங்கள் நெருங்கவே முடியாதென்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது .




மின்சாரம் இல்லாத வேளையில் மின்கட்டணத்தை உயர்த்து என்ற உயர்ந்த கொள்கையை அடுத்து கொண்டுவந்த தமிழகஅரசின்
நிர்வாகத் திறமையை கண்டு ,மக்கள் பேச்சு மூச்சில்லாமல் நிற்கவைத்த அரசு இன்னும் பலசாதனைகள் புரிய
கண்ணீருடன் வாழ்த்துகிறார்கள் .

இப்போதுதான் ஓராண்டு முடிந்திருக்கிறது ,இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறதே, மக்களின் துயர் துடைக்க .!
நிச்சயமாக,  துடைத்து எரியாமல் விடமாடார்கள் ,என்பதை நாங்கள் நம்புகிறோம். ,ரத்தத்தின் ரத்தங்களும் ,ரத்தம் சிந்தி
உழைக்கும் பொதுமக்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்து  சாதனை செய்த தமிழகஅரசை, வாழத்த
நம் வறுமை தடுப்பதால் ,மீண்டும் மேன்மக்களாகிய சரத்குமாரையும் ,கிருஷ்ணசாமியையும் வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.



1 comment:

  1. "காத்திருக்கும் நரியைப் போலத்தான் ,கழக அரசும்" - அதிமுக அரசை கழக அரசுன்னு சொல்ல மாட்டங்களே. அது எப்பவும் அம்மா அரசு தான். :)

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்