Loading

Sunday, October 26, 2014

வரலாற்றுக் கதை !!

வருடம் :2002

எஸ்மா சட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களை 
டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டது தமிழக அரசு என்ற
தலைப்புச் செய்தியை தினசரி தாளில் படித்துக்கொண்டிருந்த
நேரத்தில்தான் ப்ரியாவை பார்த்தேன் !

ஊர் திருவிழாவுக்காக  ஃபாரினிலிருந்து ..
சாரி ..
பட்டினத்திலிருந்து ..
மன்னிக்கவும்
பக்கத்து ஊரிலிருந்து பாட்டி வீட்டிற்கு வந்திருந்தாள் .
அவளை பார்த்தவுடன் ..இரண்டு நாட்களாக வராமலிருந்த
காவிரித் தண்ணீர் வந்தது போல ஆத்ம(அத்தியாவசிய )
திருப்தியடைந்தேன் !

"ப்ரியா" 

கோதுமையிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட மைதா நிறத்தை
ஒத்திருந்தாள் என நான் அடித்துவிட்டாலும் ..
நீங்கள் நம்பப்போவதில்லையென
 தெளிவாக தெரிந்திருப்பதால்
கோதுமை நிறத்திலாவது இருந்தாள் என்பதை
தயவு செய்து நம்பித் தொலையுங்கள் .

சிறு வயதிலிருந்தே பழகியிருந்த
என் தங்கையை தேடிக்கொண்டே
என் வீட்டில் நுழைந்த
ப்ரியா, என்னருகில் வந்ததும் ..

"ஜாமீன் கிடைத்துவிட்ட வதந்தியை நம்பி 
பத்து நிமிடம் செம ஆட்டம் போட்ட 
அதிமுகவினரின் அல்ப சந்தோசத்தை அனுபவித்தேன்" !

என் சந்தோசம் பொறுக்காமலோ என்னவோ ..
கையிலிருந்து பேப்பரை பிடுங்கிய என் தாத்தா ..

"இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைதென்ற
செய்தியை
சத்தம் போட்டு வாசித்ததும் ..
கொடுத்த ஜாமீனை  திரும்பி 
வாங்கிக்கொண்ட ஷாக்கிங்கை
சில நொடிகள் அனுபவிக்க நேர்ந்தது !

இருந்தும் ,,
மனம் தளராத  மன்மோகன் சிங்காய்
மௌனப் பார்வையுடன் இரண்டு நாள் திருவிழாவிலும்
கிரிவலம் வந்து ப்ரியாவின் கவனம் பெற்றதும்
காதலை கற்றுமுடித்த  சிம்புவாக நினைத்துக்கொண்டேன் !

சிம்புவாக நினைத்துக்கொண்ட பாவமோ என்னவோ ,
அவளின் அப்பாவுக்கு விஷயம் தெரிந்து சொம்போடு
எங்கள் வீட்டிற்கு வந்தார் ,
வெற்றிலையை சொம்பிலும் ,
எச்சிலை என் முகத்திலும் ஸ்ப்ரே பண்ணித்தொலைத்த
கையோடு திருவிழாவும் முடிய ..

"கள்ளப்பார்வையுடன் பிரியாவும் .
கசாப்பு பார்வையுடன் அவளின் அப்பாவும் "
என்னை விட்டு பிரிந்து சென்றார்கள் !

வருடம் :2003

கோவில் திருவிழாக்களில் ஆடு ,மாடுகளை 
வெட்டத் தடை -தமிழக அரசு உத்தரவு 

என்ற செய்தியை தாத்தா
அறிவித்துக்கொண்டிருந்த நேரத்தில்
ஊர் திருவிழா மாதமும் ஒன்றாக வந்ததில் ,
ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஊர் மக்களின்
நாக்குகள் சந்தித்தன ,
அதிர்ஷ்டவசமாக  ,
ப்ரியா வரப்போகிறாள்  என்ற செய்தியறிந்த
என் நாக்கு மட்டும் வெகுவாக ஊறியது !

சொன்னபடியே ப்ரியாவும் வந்தாள்,
இந்த முறை பிரியா  என்னிடம் வந்து
ஃப்ரியா இருக்கியா என கேட்டதும்
சிரியா நாட்டின் கலவரச் செய்தி தந்த துக்கம் கூட
காணாமல் போயிருந்தது ,,

இந்த சுவிசேஷ நிகழ்வைக் கூட மோப்பம் பிடித்துக்கொண்ட
ப்ரியாவின் சொம்பு ..ச்சே வம்பு பிடித்த
அவளின் அப்பா என்னை அவ்வப்போது சில பல வார்த்தைகளால்
பாராட்டிக்கொண்டிருந்தார் .(வீட்டில் பாராட்டு வாங்கி பழகிவிட்டதால் ,
இந்த பாராட்டுகளையும் சிரமமில்லாமல் வாங்கமுடிந்திருந்தது)

பத்தாத குறைக்கு ,தமிழக அரசும் எனக்கு பக்கபலமாக
ஆடு மாடுகளை வெட்ட தடையென்ற உத்தரவிட்டு
என் கிட்னியில் சற்று மெக்னீசியம் வார்த்ததால்
அன்றைய வருட திருவிழா
நாளொரு பார்வையும்,
பொழுதொரு சந்திப்புமாக இனிதே கடந்து சென்றன !

வருடம் 2004!!

முன்பைப்போல திருவிழாவுக்கெல்லாம் காத்திராமல்
தியேட்டர் பக்கம் தேவுடு காத்து
பத்துரூபாய் டிக்கெட்டை
ரூல்ஸ் பேசி நைசாய் வாங்கி சந்திக்கத் தொடங்கினோம்..
மொக்கை படங்களுடன் என் மொக்கை காதலும்
வளர்ந்த வண்ணமிருந்ததால்
டென்ஷனாகிய ஆடியன்ஸ்..சாரி
டென்ஷனாகிய அவரின் அப்பா ,பல ஊர் சொம்புகளுடன்
மீண்டும் படையெடுத்து வந்தார் !

அந்த நேரமாக பார்த்து ...
ஆடு மாடுகளை வெட்ட விதிக்கப்பட்ட தடையை
ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்ட செய்தியை
டீக்கடை போஸ்டர் சந்தோசமாக தெரிவித்துக் கொண்டிருந்தது !

சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடித்தது போல்
இந்த காதல் குவிப்பு வழக்கையும் இழுத்தடிக்க
முயன்று பார்த்தேன்..
துரதிஷ்டவசமாக இந்தமுறை
காமெடி தண்டபாணியாக இருந்த பிரியாவின் அப்பா
திடிரென காதல் தண்டபாணியாக மாறி கலவரமானாதில்
ஒரு மினி சுனாமி அதிர்வை (சுனாமி ஏற்படுவதற்கு முன்பே )
ஏற்படுத்தியதன் விளைவால் ..
என் வரலாற்றுக் காதல் கதையை வலுக்கட்டாயமாக
முடிவுக்கு கொண்டு வந்து தொலைத்தார்கள் !

(2005-2013)
ஆண்டுகள் விழுப்புர கல்யாண மகாலிளிருந்து
விஜய் வெளியே ஓடிய வேகத்திற்கு நிகராக ஓடியது !

வருடம் 2014!!

இப்போதும் ஊர் திருவிழாவுக்கு பிரியா வந்தாள்!
அவளின் எண்ணெய் படிந்த தலைகேசம்
பரிணாம வளர்ச்சியில் லூஸ் ஹேர் ஆகியிருந்தது .
அவ்வப்போது லூஸ் ஹேரை கோதிவிட்டுக்கொண்டு
லூஸ் போல பாவனை செய்தாள்.
திருவிழா போட்டிகளில் ஆசியன் கேம்ஸ்சில்
கலந்துகொண்டது போல் பெருமிதம் கொண்டாள் ..
தங்கையுடன் கலகலப்பாக பேசிக்கொண்டே
வீட்டிற்கும் வந்து போனாள்!காதலித்த சுவடே தெரியாமல்
கலகலப்பாக பேசியது சரித்திரத்தின் வியப்புக் குறியீடு!
இவை எல்லாவற்றையும் இயல்பாகவே எடுத்துக்கொண்டேன்!

"அவளின் குழந்தையை காட்டி
மாமா பாரு
மாமா பாரு -என்று
வித்தை காட்டியதை தவிர ....... "!



3 comments:

  1. அருமை.சுவாரஷ்யமாகவும் நகைசுவையாகவுமிருந்தது. வாழ்த்துக்கள் மேலும் மேலும் இது போல் பதிவுகளை எழுத. நன்றி :)

    ReplyDelete
  2. மிக்க நன்றி சின்னப் பையன் சார்

    ReplyDelete
  3. உங்கள் அரசியல் கலந்த படைப்புக்கள் அருமை. அழகாக எழுதியுள்ளீர்கள்

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்